கிழங்கு வகைகளுள் மிக முக்கியமானது, கருணைக் கிழங்கு.
உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியன போல் உடலுக்கு நன்மை செய்யும் கிழங்கு இது. எல்லா வயதுக்காரர்களும் குறிப்பாக வாத நோயாளிகள், சிறுவர்கள், வயதானவர்கள் என அனைவரும் பயமில்லாமல் சமைத்துச் சாப்பிடலாம். எந்தத் தீங்கும் செய்யாத கிழங்கு என்பதால்தான் இதைக் கருணைக் கிழங்கு என்கிறார்கள்.100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி 111 ஆகும். கால்சியம் 35 மில்லி கிராம், பாஸ்பரஸ் 20 மில்லி கிராம், வைட்டமின் ‘ஏ’ வைட்டமின் ‘பி’ ஆகியவையும் இக்கிழங்கில் உள்ளன. எனவே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இக்கிழங்கு இன்றியமையாத ஒன்றாய்த் திகழ்கிறது.கால்சியத்தால் குழந்தைகள் நன்கு வளர்கிறார்கள். இதே கால்சியம் வயதானவர்களின் எலும்புகள் பலவீனமடைந்து விடாமல் பாதுகாக்கப்படுகிறது. 100 கிராம் கிழங்கில் கார்போஹைடிரேட் 26%ம் ஈரப்பதம் 69.9%ம் இருப்பதால் உடலுக்கு நன்மையும் சக்தியும் அதிகம் கிட்டுகின்றன.
உடலில் எரிச்சலா?
இக்கிழங்கு வாதநோய், மூல நோய், உடல் எரிச்சல், பெளத்ரம், உடல் சூடு, மாதவிடாய்க் கோளாறு, வயிற்றுஉப்புசம், வயிற்றுவலி, பிற வயிற்றுக் கோளாறு போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.அதனால் ஜப்பானில் நோய்தீர்க்கும் கேப்ஸுல்களாக கருணைக் கிழங்கு கேப்ஸுல்கள் தயாரித்து விற்கின்றனர்.கருணைக் கிழங்கு ஒல்லியானவர்களைக் குண்டாக மாற்றுகிறது. உடலுக்கு நல்ல வலுவையும் கருணைக் கிழங்கு வழங்குகிறது.
நன்கு பசிக்க …
கருணைக் கிழங்கு மலச்சிக்கலை நீக்கும். நன்கு பசிக்கச் செய்யும். இந்தக் கிழங்கைச் சாப்பிட்டால் உடனே மலச்சிக்கல் குணமாகி அடுத்த வேளை நன்கு ருசித்து ஆவலுடன் சாப்பிட நம்மைத் தயார்படுத்திவிடும்.‘பசியில்லை, ருசியில்லை’ என்பவர்கள் அவ்வப்போது கருணைக்கிழங்குகளைச் சேர்த்து வருதல் நன்று. அடிக்கடி காபி சாப்பிடுகிறவர்களுக்கு ஏற்படும் பித்தக் கோளாறுகள் இக்கிழங்கால் குணமாகிறது. பசியைத் தூண்டுகிறது.மண்ணீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகத் தினமும் இக்கிழங்கை உணவில் சேர்த்து வருதல் வேண்டும்.
சாதாரணமாகக் கருணைக் கிழங்கைத் தோல் நீக்கிச் சிறுதுண்டுகளாய் நறுக்கி குழம்பு வைத்துச் சாப்பிட்டாலே மேற்கண்ட நன்மைகள் தொடர்ந்து கிடைக்கும்.மூலநோய் குணமாக மேற்படி முறையில் சிறுதுண்டுகளாக்கி பசும்பாலில் அவித்து உப்பு சேர்த்து உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகச் சாப்பிட வேண்டும். தினமும் அதிகபட்சம் இரு வேளை இது போல் சாப்பிட வேண்டும்.பெளத்திரம் என்னும் இரத்த மூலம் குணமாகப் பசும் பாலில் அவித்த கருணைக் கிழங்குடன் உப்பு, ஒரு டீஸ்பூன் சாப்பாட்டு நெய் முதலியவற்றையும் சேர்த்து உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகச் சாப்பிடவேண்டும். மூலநோய்க்கான இந்த உணவு மருந்தை தயாரிக்க மண்சட்டியிலேயே கருணைக்கிழங்கை பயன்படுத்தவேண்டும்.
செரிமானத்துக்கு ….
அடிக்கடி வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி ஏற்படும் வளரும் குழந்தைகளுக்கு கருணைக் கிழங்கைச் சமைத்துக் கொடுத்து வந்தால் போதும். இக்கிழங்கில் உள்ள செரிமானப் பொருள்களும், கால்சியச் சத்தும் குழந்தைகளுக்கு அதிகம் நன்மை செய்கின்றன.மூலம், பசியின்மை, தாது பலவீனம் போன்றவை குணமாகக் கருணைக் கிழங்கின் தண்டை கீரை போன்று சமைத்து உண்ண வேண்டும். இதனால் உடலுக்குப் பலமும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கின்றன.கருணைக் கிழங்கு வகையை சேர்ந்த காட்டுக் கருணை, காடுகருணை ஆகியவை மிகவும் காரமாய் இருக்கும். இவற்றை அளவுடன்தான் சாப்பிடவேண்டும்.டி.பாட்டாட்டஸ் என்பது சீன வகை கருணை கிழங்கு ஆகும். இந்தக் கிழங்கை வீட்டை அழகுப்படுத்துவதற்காக பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் பயிர் செய்கின்றனர். வீடுகளில் இக்கிழங்கு அழகிற்காகத் தொங்கும். இதில் வேலைப்பாடுகள் செய்தும் தொங்க விட்டிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment